August 2025

                                               வடமேற்கு மண்டலம்


ஆகஸ்ட் 22 யோகப்பட்டி பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கானக் கூடுகையில் 70 வாலிபர்கள் பங்கேற்றனர்;. இக்கூடுகையில், சகோதரர் மணிலால் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, நிமோஹியா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 69 பேரும், ஹர்நாடண்ட் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டங்களில் 100 பேரும் பங்கேற்றனர். பணித்தளங்களிலுள்ள வாலிப சகோதர சகோதரிகள் சந்திக்கப்படவும், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடையவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 23 ஷாபூர், சண்டேஸ் மற்றும் பாரா ஆகிய பணித்தளத்தில் நடைபெற்ற ஒரு நாள் உபவாசக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகைகளில் 100-க்கும் அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காகவும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். இப்பணித்தளங்களில் ஜனங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், ஊழியத்திற்கு உண்டாகும் தடைகள் நீங்கவும் ஜெபிப்போம். 

ஆகஸ்ட் 24 கடந்த நாட்களில், பாவ்னா, பீரோ, சண்டேஸ், ஷாபூர், பஹாகா, பைரோகஞ்ச் மற்றும் ராம்நகர் ஆகிய பணித்தளங்களில், 186 பேர் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து, இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தங்கள் விசுவாசத்தினை உடன்படிக்கையின் மூலமாக வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! இவர்கள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் மற்றும் இவர்களது குடும்பங்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 25 சிக்தோர், பர்கான், ஹர்புர்வா, பெல்வானியா, பேசுமான்பூர், தோக்ரா, மகாடி, டும்ரியா, பீரோகஞ்ச், பஹாகா மற்றும் மோத்திஹாரி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் வாயிலாக, அநேக சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். இவர்கள் சிறு வயதிலேயே இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், இவர்களது குடும்பங்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் மற்றும் இவர்களது எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 26 சவுராஹா, பிபரியா, சிர்சியா, ஹர்நாடண்ட் மற்றும் சங்ரன்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற நற்செய்தி கூட்டங்களையும், வீட்டுக் கூடுகைகளையும் மற்றும் சுவிசேஷ ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். நவ்டான், போரியா ஆகிய பணித்தளங்களில் ஆலயங்கள் கட்டப்படுவதற்கான ஏற்ற நிலங்கள் கிடைக்கவும் மற்றும் சாண்டி, ரிவீல்கஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.